எள் சாதம்

By Praveen Kumar
எள் சாதம் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சத்தான ஒரு உணவு ஆகும். இவை கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்க்குள் தயார் செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

பள்ளிகள் திறந்து விட்டன நம் பிள்ளைகளும் பள்ளி செல்ல தொடங்கி விடுவார்கள். நமக்கோ அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமான மற்றும் சத்தான அதே வேளையில் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மதிய உணவுகளை செய்து தர வேண்டும் என்கின்ற ஆர்வம் கூடியிருக்கும். அதற்கு நாம் இன்று இங்கு காண இருக்கும் இந்த எள் சாதம் மிகவும் பொருத்தமானது. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான எள் சாததின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Ellu Sadam (Sesame Rice)

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே ஹெல்த் கான்சியஸ்ஆக மாறி வருகிறோம். நல்ல உணவாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறோம். நம் தேடலை இந்த எள் சாதம் ஒரு படி குறைக்கும். அதுமட்டுமின்றி இவை நம் பிள்ளைகளுக்கு சொற்ப நேரத்தில் வெகு எளிதில் செய்து கொடுக்கக்கூடிய சத்தான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட. இந்த எள் சாதத்தை கட்டாயம் செய்து பார்த்து உங்கள் பிள்ளைகள் என்ன சொன்னார்கள் என்பதை எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

எள் சாதம் செய்ய நாம் முதலில் எள்ளு விதை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, புளி, உப்பு, பெருங்காயம், மற்றும் தேங்காய் துண்டுகளை கொண்டு ஸ்பெஷலான எள்ளு பொடியை தயார் செய்வோம். இந்த எள்ளு பொடி நாம் சேர்க்கும் வேகவைத்த பாசுமதி அரிசி, வறுத்த முந்திரிப் பருப்பு, மற்றும் வேர்கடலையுடன் நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அற்புதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

எள்ளு சாகுபடி மனித நாகரீகத்தின் மிக தொன்மையான ஒன்றாகும். இவை சுமார் 8000 வருடங்களுக்கு முன்பாக உதயமானவை என்பதால் எள்ளு சாதம் எந்த நாட்டில் உதயமானது என்பதற்கான தெளிவான தரவுகள் இல்லை. இருப்பினும் வரலாற்று நிபுணர்கள் இவை ஆசிய கண்டத்திலோ அல்லது கிழக்கு ஆப்பிரிக்காவிலோ உதயமாகி இருப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

எள் சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

எள் சாதத்தை முழுமையாக சுமார் 30 நிமிடத்தில் இருந்து 35 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் ரெண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

எள் சாதத்தை சுமார் ஒருநாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் இதை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது. (எள்ளு பொடியை சுமார் ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்).

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

எள் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் எள்ளில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B 6 இருக்கிறது. இவை லிவர், கிட்னி, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் விட்டமின் B இருக்கிறது. இவை இருதய, பல், மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இருதயம், கிட்னி, எலும்பு, மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

இதில் நாம் சேர்க்கும் மிளகில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், இரும்பு சத்து, மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

 

Ellu Sadam (Sesame Rice)
No ratings yet

எள் சாதம்

எள் சாதம் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சத்தான ஒரு உணவு ஆகும். இவை கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்க்குள் தயார் செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time10 minutes
Cook Time25 minutes
Total Time35 minutes
Course: Main Course
Cuisine: Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 3 tsp எள்ளு விதைகள்
  • 3 tsp எள்ளு தூள்
  • 10 காய்ந்த மிளகாய்
  • 3 tsp கடலை பருப்பு
  • 3 tsp உளுத்தம் பருப்பு
  • 1 tsp மிளகு
  • 1 tsp சீரகம்
  • 1/2 tsp கடுகு
  • 1/4 tsp பெருங்காய தூள்
  • 2 சிறு துண்டு புளி
  • 1 கை அளவு வறுத்த வேர்க்கடலை
  • 1 கை அளவு முந்திரிப் பருப்பு
  • 2 tsp பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  • 1/2 tsp எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு கல் உப்பு
  • தேவையான அளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அது சுட்டதும் அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் இரண்டு மேஜைகரண்டி அளவு உளுத்தம் பருப்பு சேர்த்து அது சற்று நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
  • அது சற்று நிறம் மாறியவுடன் அதில் சீரகம் மற்றும் எட்டு காய்ந்த மிளகாய்களை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் மிளகு மற்றும் புளியை சேர்த்து அதை சுமார் இரண்டு நிமிடம் வரை வறுக்கவும்.
  • இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை அதை வறுக்கவும்.
  • மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அது பொன்னிறம் ஆனதும் அதில் எள்ளு விதைகளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு ஆறவிடவும்.
  • அது ஆறியவுடன் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் மூன்று மேஜைகரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
  • அது பொன்னிறமானதும் அதில் இரண்டு காய்ந்த மிளகாய், கடுகு, மற்றும் கருவேப்பிலை இலைகளை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் எள்ளு பொடியில் இருந்து சுமார் மூன்று மேதைகரண்டி அளவு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (உப்பு மற்றும் எள்ளு பொடியை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்).
  • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான மற்றும் சத்தான எள்ளு சாதம் தயார்.

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

எள் சாதத்தை நாம் கட்டாயம் பாசுமதி அரிசியில் தான் செய்ய வேண்டுமா?

கட்டாயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் வழக்கமாக பயன்படுத்தும் அரிசியை கூட நாம் உபயோகித்துக் கொள்ளலாம்.

எள் சாதம் செய்ய நாம் எள்ளு பொடி மற்றும் சாதத்தை முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாமா?

தாராளமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்து வைத்தால் காலையில் வெறும் பத்தே நிமிடத்தில் நம் பிள்ளைகளுக்கு மதிய உணவை நாம் தயார் செய்து முடித்து விடலாம்.

எள் சாதத்தை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் தேவை என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு காய்ந்த மிளகாய்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒரு மேஜைகரண்டி அளவு மிளகை சேர்த்துக் கொள்ளலாம்.

எள் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பை நாம் தவிர்த்து விடலாமா?

உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் அதை தவிர்த்து விடலாம். இருப்பினும் எள் சாதத்தின் சுவையை இவை பல மடங்கு உயர்த்தும்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment