போளி இந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக தென்னிந்தியாவில் இவை மக்களால் அதிகம் செய்து சுவைக்கப்படுகிறது. பல மாலை நேர சிற்றுண்டிகள் இருந்தாலும் போளிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. சுட சுட போளி செய்து விற்கும் கடைகளில் மாலை நேரங்களில் அலை மோதும் கூட்டமே அதற்கு சாட்சி. போளிகளில் பல வகை உண்டு. அதில் பருப்பு போளி, கோதுமை பருப்பு போளி, மற்றும் தேங்காய் போளி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது தேங்காய் போளி.
இப்பொழுது கீழே தேங்காய் போளி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
5 from 1 vote
தேங்காய் போளி ரெசிபி
சுடசுட போளி செய்து விற்கும் கடைகளில் மாலை நேரங்களில் அலை மோதும் .
Prep Time15mins
Cook Time15mins
Total Time30mins
Course: Snack
Cuisine: South Indian, Tamil
தேங்காய் போளி செய்ய தேவையான பொருட்கள்
1கப் மைதா மாவு
1கப் துருவிய தேங்காய்
200கிராம் வெல்லம்
¼மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவுஎண்ணெய்
தேவையான அளவுநெய்
தேங்காய் போளி செய்முறை
முதலில் தேங்காயை துருவி, வெல்லம் மற்றும் ஏலக்காயை தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு, 3 மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை சப்பாத்தி மாவு பதத்தை விட மிருதுவான பதத்திற்கு பிணைந்து கொள்ளவும்.
பின்னர் மாவின் மீது சிறிதளவு நல்லெண்ணெய்யை தடவி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மூடி போட்டு அதை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை கரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்ட பின் அதில் நாம் தூள் செய்து வைத்திருக்கும் வெல்லத்தை கொட்டி அதை நன்கு கரைத்து விடவும்.
வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
நெய் உருகியதும் அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதை நன்கு நெய்யுடன் கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வதக்கவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வதக்கவும்.
தண்ணீர் நன்கு வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து அதை நன்கு ஆற விடவும்.
இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு வாழை இலையை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை அதில் வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் அதை தேய்க்கவும்.
பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பூரணத்தில் இருந்து சிறிதளவு எடுத்து அதன் நடுவில் வைத்து அதை அனைத்து புறங்களிலும் இருந்து மடித்து அதை மீண்டும் உருண்டையாக உருட்டவும்.
அடுத்து அதை மீண்டும் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் அதை தேய்த்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (இதை தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும் அதிகமாக அளித்தி தேய்த்து விடக்கூடாது.)
இவ்வாறு மீதமுள்ள உருண்டைகளையும் தேய்த்து எடுத்து தயாராக தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு அது ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பிபோட்டு அதை வேக விடவும்.
அது இரு புறம் வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான தேங்காய் போளி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.